Saturday, December 4, 2010

அரசியலில் பணியாற்றும் முழுத்தகுதியும், திறமையும் எங்களுக்கு உண்டு - திருநங்கை கல்கி

நேர்முகம் - சகா


அரவாணிகளுக்கு குடும்பத்தில், சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன?
முதல் பிரச்சினை மனம், உடல் என்கிறப் போராட்டங்களில் தடுமாற்றம் எங்களுக்குள் பெண்மை வெளிப்படும் பொழுதுக் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அக்காவுக்கு கல்யாணம் நடக்காது, தங்கச்சிக்கு கல்யாணம் நடக்காது அதுமாதரி நிறைய விஷயங்கள். அதனால் பெரும்பாலானவர்கள் குடும்பத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அடுத்ததா கிண்டல்கள், கேலிகளுக்கு ஆளாக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகளில் இருந்துத் துரத்தப்படுகிறார்கள். அதனால் மற்ற திருநங்கைகளுடன் இணைந்து, என்ன பண்றாங்கன்னா ஒன்று, பாலியல் தொழில் அல்லது கைதட்டி பிச்சைக் கேட்பது அது இரண்டும் தான் பண்றாங்க.

இந்த நிலைமை எதனால் ஏற்படுது?
இருந்தே திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது. பாலியல் அடையாளம் என்ற காரணமாக ஒதுக்கி வைப்பது. அரவாணிகளாக இருப்பது குற்றமல்ல, அது ஒருதன்மை. அதைப்பற்றிய பாடங்களும் எந்த பாடத்திட்டத்திலும் இல்லை. அதனால் பட்டம் படிச்சவன், ஆராய்ச்சிப் படிப்பு முடிச்சவன்னாலும் இரண்டாவது தான். படிச்சவனானாலும் திருநங்கைகள் விசயத்தில் ஒரே மாதிரிதான் நடந்துக்குறாங்க. அருவருப்பா பாக்குறது - பாலியல் உறவுகளுக்கு பயன்படுத்து கிறது - கழிப்பிடங்களாக உபயோகப்படுத்துறது.

உங்களுக்கு இது மாதிரியான சங்கடங்கள், துன்பங்கள் நிகழ்ந்தது உண்டா?
வந்து என் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வரை என் குடும்பத்துடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்ப சென்னையில் இருந்தாலும் மாசத்துக்கு ஒருதரம் எங்க ஊருக்குப் போய் எங்க அம்மா, அக்கா, தங்கச்சி கூட இருந்துட்டு வருவேன். எனக்கு நண்பர்களும் நிறைய இருக்காங்க. எனக்கு அந்த மாதிரியான தொந்தரவுகள் பெரிசா எதுவும் இல்லை. அந்த பாதிப்புகள், தொந்தரவுகள் அதிகம் நடந்து கொண்டிருந்தது.

இன்றைய தமிழக அரசு அரவாணிகளுக்கு தனியாக நலவாரியம் அமைத்து கொடுத்திருக்கு. அந்த நலவாரியம் அமைவதற்கு உங்களுக்கு பக்க பலமாக இருந்தார்ன்னு யாரைச் சொல்லுவீங்க?
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிதான். அவங்க அரவாணிகள் மேல ரொம்ப அன்பு கொண்டவங்க, அக்கறை கொண்டவங்க. அவங்களோட முயற்சியாலே அரவாணிகள் நலவாரியம் அமைச்சது மட்டுமல்லாமல் பல விசயங்களுக்கு அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துகிட்டே இருந்தாங்க. அரவாணிகள் உணர்வுகள் மதிக்கப்படனும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படனும் என்று எங்களுக்காக பல மேடைகளில் குரல் கொடுத்தார் கனிமொழி.

பெரும்பாலான திருநங்கைகளுக்கு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு இருப்பது இல்லை, அதற்கு என்ன காரணம்?

காரணமும் இந்த சமூகம் தான். ஏன்னா முறையான கல்விமுறை இல்லை. சரியான தகவல்கள் ஏதுமில்லை. இந்த சமூகம், திருநங்கைகள் இருக்கிறார்கள் என்பதையே அங்கீகரிக்கவில்லை. இவர்கள் கோமாளிகள், பாலியல் சுகத்திற்கு அலைபவர்கள் அப்படிங்கற பார்வைகள்தான் இருந்துட்டு இருக்கு. என்னைப்போன்று படித்த சிலபேர் தேடல்கள் பெரியளவிற்கு விரிவடையும். இணையத்தின் மூலமா சரியான சிகிச்சை, சரியான மாற்றம் அப்படின்னு நாங்க போயிற்றோம். ஆனால் படிக்காத, ஏழை அரவாணிகளெல்லாம் கொஞ்ச, கொஞ்சமாக காசு சேர்த்து என்ன சிகிச்சை செய்ய முடியும், அப்படின்னுதான் பார்ப்பாங்க.

மருத்துவர்கள் அரவாணிகள் பற்றி குறிப்பிடும்போது தங்களைப் பெண்கள் என்று மனதளவில்தான் நினைத்துக் கொள்கிறார்கள். ஹார்மோன் மூலம் பெண்ணாக மாறுவதற்கு வாய்ப்பில்லைன்னு சொல்றாங்க இது சரியானது தானா?
கூற்றை திருநங்கை மருத்துவர் சொல்லியிருந்தா நான் ஏற்றுக்கொள்வேன். இதுவந்து மனக்குறைபாடுங்கற மாதிரியான கருத்துத்தான் அவர்களது கூற்று. ஆனா அப்படியல்ல. புராண காலத்தோடு இந்து இதிகாசங்கள் எல்லாவற்றிலும் ஆண்கள், பெண்கள், அரவாணிகள் என்ற மூன்று பேரும் இருந்திருக்கிறார்கள். மகாபாரதத்துல அர்ஜூனன் ஒருஆண்டு காலம் அரவாணியாக வாழ்ந்ததா கதையும் உண்டு. சிகண்டிங்கற ஒரு அரவாணி வந்து பீஷ்மரை கொல்ற ஒரு பாத்திரமும் அந்த கதையில் உண்டு. இவர்களுக்கெல்லாம் மனநோயா? ஆக மருத்துவர்கள் வந்து இதுமாதிரி தவறான கருத்து வெச்சிருக்காங்க, இப்படி சொல்ற மருத்துவர்கள் யாரும் எங்களைப் போன்றவர்களுக்கு முறையான சிகிச்சை செய்யும்படி எந்தக்கோரிக்கையும் வச்சதில்லையே. எல்லா மேலைநாடுகளிலும் உள்ள மருத்துவர்களும் இது ஒரு மனநோயல்ல என்று நிரூபித்து விட்டார்கள்.

அரவாணியா இருக்கறதால சமூகத்துல வேறுபட்ட பார்வை இருக்கு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடு வாடகைக்கு கிடைக்கிற துங்கறது பெரிய சிக்கலா இருக்கும். அதை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?
பார்த்தீங்கன்னா நெறைய இருக்கு. ஒரு பக்கம் வந்து வேலைக்கு போகும்போதும் முழு பெண்ணாக அறுவை பண்ணிக்கிட்டாலும் நிறையப் பேருக்கு பொருளாதார வசதி இல்லாததால முகமாற்றம், உடல்ரீதியான மாற்றத்திற்கான மருந்துகள் உட்கொண்டு முழுப்பெண்ணாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். அதனால் சிலபேர் தோற்றத்தில்  ஆண் தன்மையோடு இருப்பாங்க. அவர்களுக்குத்தான் சமூகத்துல பெரிய சவால்கள் இருக்கு. அவர்களுக்கு எங்கேயும் வேலை கொடுக்கமாட்டார்கள். வேலைக்காரியா செக்கறதுக்குக் கூட யாரும் தயங்குவாங்க. சமூகத்துல எல்லா நிலையிலும் அவங்க தள்ளப்படுறாங்க. வீட்டவிட்டு வெளியே வந்தாலே கிண்டல், கேலி. இப்படி துன்பப்படும்போது சமூகத்திற்கெதிராக கைதட்டி பணம் கேட்பது கொடுக்காதபோது புடவையைத் தூக்கி காட்கிறது அல்லது பலாத்காரமாக பணம் பறிக்க முயற்சிக்கிறதுன்னு பன்றாங்க. இதற்குக் காரணம் சமூகம்தான். எந்த ஒரு சிறுபான்மை சமூகத்தையும் அழுத்தி அழுத்தி வெச்சீங்கன்னா ஒரு கட்டத்துல அது போராட்டமா வெடிக்கும். அரவாணிகள் வந்து என்னடா மரியாதை கொடுக்கறது எடுடா காசு என்கிற மாதிரியான நடவடிக்கைல இறங்கி விடுகிறார்கள். ஆனா இந்த மாதிரி நடந்து கொள்ளும் அரவாணிகள் மாறனும். முக்கியமா சமூகத்தோட பார்வையிலும், நடத்தையிலும் மாற்றங்கள் வேணும்.

அரவாணிகள் பற்றி மாணவர்கள், இளைய தலைமுறையினர் புரிந்து கொள்வதற்கு எந்த அணுகுமுறையைக் கையாள்கிறீர்கள்?
தலைமுறையினர், மாணவர்கள் எங்களைப்பற்றி புரிந்து கொள்வதற்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் நான் சென்று உரையாற்றுகின்றேன். இங்கு மட்டுமல்ல, கேரளாவில் உள்ள கல்லூரிகளில் நுழைஞ்சு உரையாற்றுன முதல் அரவாணி நான்தான். கேரளா மாதிரியான ஒரு இடத்தில் அரவாணிகளுக்கு சுத்தமா அங்கீகாரம் கிடையாது. அடி உதை தான் கிடைக்கும். அங்குள்ள அரவாணிகள் ரொம்ப அடிமட்டத்துல இருக்காங்க. ஏன்னா, மதங்கிற ஒரு விஷம் வேரூன்றி இருக்கு. எங்கெல்லாம் மதம்ங்கறது பெரிய விஷயமா இருக்குதோ அங்கெல்லாம் அடக்குமுறை இருக்கும். அது வந்து அரவாணிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினையா இருக்கு. அதனால, அங்குள்ள கல்லூரிகளுக்கு சென்று உரையாற்றி நல்ல மாற்றத்திற்கான விதையை அங்கு விதைச்சிருக்கேன்.

சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
அரசும் செய்யாத ஒன்றை இப்ப இருக்கிற அரசு எங்களுக்கு நலவாரியம் அமைச்சு கொடுத்திருக்குது, அடுத்ததா அரசு கல்லூரிகள்ல ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினமான திருநங்கைகளை சேர்த்திருக்காங்க. இதுவந்து, கோ எஜிகேஷன் கல்லூரிகளில் மட்டும் இந்த அங்கீகாரம் இருக்கும்ன்னு அறிவிச்சிருக்காங்க. மூன்றாவதா திருநங்கைகளுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா எல்லாம் குடுக்குறாங்க. வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, எல்லாம் கொடுத்திட்டு இருக்காங்க. இன்னும் பாத்தீங்கன்னா அரவாணிகள் எத்தனைபேர் இருக்காங்கன்னு கணக்கெடுத்துட்டு இருக்காங்க. இத அடிப்படையா வெச்சு இன்னும் பல விசயங்களை எங்களுக்காக தமிழக அரசு செய்ய இருக்கு. அடுத்துவர அரசுகளும் அதைத்தொடர்ந்து செய்யும். தமிழ்நாட்டுல அரவாணிகளுக்காக அரசு உதவ தயாராக இருக்கு. எங்களுக்கு குரல் கொடுக்க அரசியல் தலைவர்களும் தயாரா இருங்காங்க. நாங்கள் எதிர்பார்க்கறது எல்லாம் மக்கள் மனமாற்றம் தான். அரசியல் தலைவர்கள் எல்லோரும் வந்து அரவாணிகளுக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க. மக்கள் மனதில், ஒருவரின் உடல் அமைப்பு, உருவஅமைப்பு, பாலின அமைப்பை வைத்து எடைபோடுவது என்ற தவறான அணுகுமுறை மாற வேண்டும். அரவாணிகளும் மனிதர்கள் தான் என்கிற உணர்வு வரவேண்டும்.

உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதான் நீங்கள் காதல், திருமணம் போன்ற உறவுகளை எப்படி எதிர் நோக்கியிருக்கிறீர்கள்?
பாதுகாப்பற்றதாக எல்லா திருநங்கைகளுக்கும் இருக்கு. எல்லா உறவுகளையும் தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிடும் எல்லா அரவாணிகளுக்கும் ஆசை இருக்கும். தனக்கென்று ஒரு துணை வேணும் என்றும், தனக்கென்று காதலன், தனக்கென்று கணவன் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனா திருநங்கை வாழ்க்கை சோகம் என்னவென்றால் எந்த ஒரு ஆணும் நிரந்தரமா திருநங்கையோடு இருக்கமாட்டான். நிறையத் திருநங்கைகள் ஆண்களால் ஏமாற்றப்பட்டு, துன்புறுத்தப் பட்டு இருப்பார்கள்.

ஆண்கள் வந்து அரவாணிகளிடம் பழகுவது பணத்திற்காகவும், பாலியலுக்காவும் மட்டுமே. தனக்கு ஆண் துணை வேண்டும் என்பதற்காக அவன் என்ன சொன்னாலும் எப்படி துன்புறுத்தினாலும் பொறுத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். ஆக, காதல் என்பது அரவாணிகள் வாழ்க்கையில் அப்பப்போ வந்துவிட்டுதான் போகும். நிரந்தரமாக இருக்காது. இது எல்லா அரவாணிகளுக்கும் பொருந்தும்.

உறவுகளினால் ஏற்படும் இதுபோன்ற ஏமாற்றங்களை எப்படி தாங்கிக் கொள்கிறீர்கள்?
ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்வது ஒரு கஷ்டமான விசயம். பெரிய போராட்டமாக இருக்கும். பலர் நொந்து தற் கொலைப் பண்ணிக்கொள்வார்கள். சிலர் எதிரா திரும்பிவிடுவார்கள். ஏமாற்றிய ஆணை பழிவாங்க எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்தி விடுவார்கள். இன்னும் பலர் மனதுக்குள் குமுறிக் கொண்டு போதைப் பழக்கத்துக்கு, அதாவது குடி, பாக்கு போன்றவற்றை பயன்படுத்தித் துன்பத்தை மறக்க அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

ஜாதிக்கொடுமை, பெண்ணடிமை மூன்றாவதாக அரவாணிகள் ஒடுக்குமுறை இந்த மூன்றையும் செய்யும் ஆண் சமூகத்தின் மீது உங்கள் மனநிலை என்ன?
ஆணாதிக்கம் அப்டிங்கற விசயம் பெண் சமூகத்தையே அடக்கி வெச்சி ருக்குது. பெண்களை அடக்கும்போது அரவாணிகளை அடக்கு வது என்பது அதன் தொடர்ச்சி தான். இதற்கு மதங்கள் மிகப்பெரிய காரணம் தான். ஜாதிகள் பிரிப்பு, பாலின ஒடுக்குமுறை இதெல்லாம் அதற்குள் அடங்கிவிடுகிறது. ஆனா, அரவாணிகள் எல்லாம் இதற்குள் சிக்கவில்லை. நாங்கள் அரவாணிகளாக மாறிய உடனே எங்க ஜாதியெல்லாம் தூக்கிப்போட்டுவிடுகிறோம். அரவாணிகளாகிய நாங்களெல்லாம் ஒரே குடும்பமாக இருக்கிறோம். என்னுடைய குரு பிறப்பில் முஸ்லிம், நான் இந்து இருந்தாலும் அவர்தான் என்னுடைய தாய். ஆக ஜாதி மதமெல்லாம் எங்களுக்கு கிடையாது. மற்றபடி பெண்ணுக்கு ஏற்படுகிற அனைத்த அடக்குமுறைகளும் எங்களுக்கும் உண்டு. நீ பெண் மாதிரி இருக்கிறியா அதனால உன்னை அடக்குறேன் என்று ஆண் சமூகம் கேவலமாக நடந்து கொள்கிறது.

அரவாணிகளில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இப்ப கேள்வி என்னன்னா உயிர் கொல்லி நோய் அதாவது எச்ஐ.வி, எய்ட்ஸ் இவர்களால்தான் பரப்பப்படுவதாக சமூகத்தில் கட்டமைப்பு நடந்து கொண்டு இருக்கே?
தன்னுடைய உடம்பில் எச்ஐவி கிருமிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றும் நடத்தல. ஒரு அரவாணிக்கு எய்ட்ஸ் வருதுன்னா அவங்ககிட்ட உறவு வைத்துக் கொள்கிற ஒரு ஆண் மூலமாகத்தான் வருது. அரவாணிகள் பாலியல் தொழில் செய்வது உடல் சுகத்திற்காக அல்ல, வயிற்றுப் பசிக்காக. எல்லா ஆண்கள் கிட்டேயும் காண்டம் போட்டுட்டு உறவு வெச்சுக்கங்கன்னு சொல்ல முடியாது. பல ஆண்கள் ரொம்ப முரட்டுத்தனமா இருப்பாங்க. அப்படி இருக்கறப்போ இந்தமாதிரி நோய் பரவுவதற்கு ஆண்கள்தான் காரணம்.

அரவாணிகள் அரசியலில் பங்கெடுப்பது குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை திருநங்கைகள்தான் அரசியலுக்கு, பொறுப்புகளுக்கு மிக மிக தகுதியானவர்கள் என்று சொல்வேன். அதற்கு காரணம் சமூகத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டது அரவாணிகள்தான், ஆணா இருந்து பெண்ணா மாறியதால் ஆணுக்கு என்ன பிரச்சினை பெண்ணுக்கு என்ன பிரச்சினை என்று தெரியும். அடுத்த காரணம் சொத்து சேர்த்து வைக்கலாம் என்கிற தேவை யெல்லாம் திருநங்கைகளுக்கு இல்லை. நாங்க அடிப்பட்டு வந்ததால் தைரியம் இருக்கு. அரசியலுக்கு தேவையான துணிச்சல், நேர்மை எங்களிடம் நிறையவே இருக்கு. அடுத்து வர தேர்தல்களில் நிறைய அரவாணிகள் போட்டியிடுவோம். அந்த சூழ்நிலை உருவாகி வருகிறது.

உங்களுக்காக மட்டுமேப் போராடிக்கொண்டு இருந்த நீங்கள் அதிரடி யாக ஈழத்தமிழர்களுக்காக உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் நடத்தினீர்கள். அதற்கு என்ன காரணம்?
எங்களுடையப் பிரச்சினைகள் ஒரு புறம் இருந்தாலும், சமூகத்துல என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டேதான் இருக்கிறோம். ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த இருபது ஆண்டுகளாக எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் வன்கொடுமைக்கு ஆளானார்கள் என்பதை எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டு வந்திருக்கிறோம். போர் தீவிரமடைந்து பல பேர் மரணமடைந்தார்கள். அது எங்க எல்லாரையும் வேதனைப் படுத்துச்சு. தங்கள் குடும்பத்தை இழந்து, தன் சகோதரிகள், தாய் போன்றோரை இழந்து தன்னந்தனியாக தன்நாட்டை விட்டு எலிகளாக வரும் கொடுமை எங்களுக்கானதாக இருக்கிறது. ஏன்னா, நாங்க அரவாணிகள் என்றக் காரணத்திற் காகவே குடும்பத்தைவிட்டு வெளியே வந்து விடுகிறோம். அல்லது துரத்தப்படு கிறோம். ஆக சொந்த நாட்டிலேயே புலம் பெயர்ந்து வாழும் வேதனை எங்களுக்கு இருக்கிறது. அதுபோலவே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளையும் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே தான் அந்தப் போராட்டத்தை நடத்தினோம். ஈழத் தமிழர்களுக்கான எங்கள் ஆதரவைத் தெரிவிக்கவே நாங்கள் போராட்டத்தை நடத்தினோம். சகமனிதர்கள், தமிழர்கள் என்பதற்காக முதன்முறையாகக் குரல் கொடுத்ததற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். அதுபோல ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தால்தான் சமூகத்தால் நாங்களும் அங்கீகரிக்கப்படுவோம்.

அரவாணிகள் என்பவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் தான் என்று கருத்து நிலவுகிறதே, அது உண்மையா?
முழுக்க முழுக்க தவறான கருத்து. சில கருத்துக்கள் வதந்திகளாய் பரவுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும், அரவாணிகளுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு. ஓரினச் சேர்க்கையாளர்கள் அதாவது ஹோமோ செக்ஸ் வைத்து கொள்பவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவுகள் எதுவும் இருப்பதில்லை. தங்களை ஆண்களாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனா அரவாணிகளுக்கு தான் யார்? என்பதே முதல் பிரச்சினை. இரண்டாவதா தான் யாரால் ஈர்க்கப்படுகிறோம் என்கிறப் பாலியல் பிரச்சினை.

ஆக அரவாணியை பொறுத்தவரை பாலியல் உணர்வு என்பது இரண்டாம் பட்சம்தான். முதலாவது தான் ஆணா, பெண்ணா என்பதுதான். ஒரு அரவாணி யைப் பொறுத்தவரை துணையில்லாமல் பாலியல் ஈர்ப்பில்லாமல் இருந்து விடுவார். ஒரு ஆண் துணையில்லாமல் அவளால் இருக்கமுடியும். ஆனால் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் காதல் என்று வருவதைத் தவறென்று நாம் கருத முடியாது. ஏன்னா அது அவங்களுடைய தனிப்பட்ட விசயம். மற்றவர் படுக்கை அறையை நாம் எட்டிப்பார்க்கக் கூடாது


Original Post From: http://sahodari.blogspot.com/2010/12/blog-post.html

Sunday, May 2, 2010

நாடுகடந்த தமிழீழம் – ஆட்காட்டி அரசியல் : சபா நாவலன்

மகிந்த ராஜபக்ச அரசு இந்திய துருவ வல்லரசின் துணையோடு வடகிழக்கைச் சூறையாடிக்கொண்டிருக்கிறது. உலகமே பார்த்துக்கொண்டிருக்க வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தி முடிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. அறுபதாண்டுகால தேசிய இனப் பிரச்சனைக்கு எந்த அரசியல் தீர்வும் முன்வைக்கப்படாமலே, தமிழ்க் கட்சிகளின் பக்கபலத்தோடு ராஜபக்ச குடும்பம் தனது அதிகாரத்தை மறுபடி உறுதி செய்திருக்கின்றது.

உலக அதிகார வர்க்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இனப்படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் எந்தத் தடையுமின்றி இலங்கைத் தீவில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தென்னிந்திய அரசியல் வியாபாரிகள், புலம்பெயர் ஆட்காட்டிகள், அரச துணைக்குழுக்கள் என்று ஒரு இறுக்கமான கூட்டு அப்பாவி மக்கள் மீது தமது அதிகாரத்தை நிறுவிக்கொண்டிருக்கிறது.

ஆசியப் பொருளாதாரத்தின் உலகு சார்ந்த புதிய மாற்றம், பிராந்திய அதிகார மையங்களின் புதிய எழுற்சி, மேற்குப் பொருளாதார ஆதிக்கத்தின் பின்னடைவு என்ற சிக்கலான பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் அப்பால் பேரினவாத அடக்கு முறைக்கெதிரான வீழ்ச்சி என்பது சில இலகு படுத்திய பாடங்களைக் கற்றுத்தந்திருக்கிறது.

புலிகள் தமது போராட்டத்தின் ஆரம்பப் காலப் பகுதிகளிலிருந்தே அதிகார வர்க்கங்களுடனான சமரசம் மட்டுமே தமது அரசியற் தந்திரோபாய உக்தியாகக் கையண்டிருந்தனர்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலமான வன்னிப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் யாரெல்லாம் மௌனமாயிருந்தார்களோ, யாரெல்லாம் காட்டிக்கொடுத்தார்களோ, யாரெல்லாம் இலங்கை அரசின் பின் புலத்தில் செயலாற்றினார்களோ அவர்கள் மட்டும் தான் புலிகளின் பின்பலமாகக் கருதப்பட்டவர்கள்.

கருணாநிதி, திருமாவளவன்,ஜெகத் கஸ்பர், வை.கோ, நெடுமாறன், பிரித்தானியத் தொழிற்கட்சி, ஒபாமா குழு என்று உலக அரசியல் அதிகார மையங்களின் பங்குதாரர்களின் நீண்ட பட்டியலில் அடங்கக்கூடிய அத்தனை புலி சார்ந்த அரசியல் வியாபாரிகளும் ஆயிரக்கணக்கில் சாதித்திருக்க முடியும். வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில்,அப்பாவி மக்கள் இரசாயனக் குண்டுகளுக்கு இரயாக்கப்படுக்கொண்டிருந்த வேளையில் தமிழ் நாட்டையோ ஏன் உலகையோ கூட நிலை குலையச் செய்திருக்க முடியும். அப்படி ஏதும் நடந்தாகவில்லை.

இனப்படுகொலை நிறைவேற்றி முடித்துவிட்டு எந்தச் சலனமுமின்றி தனது குடும்ப சர்வாதிகாரத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது ராஜபக்ச அரச அதிகாரம். வடகிழக்கின் தேசியத் தன்மையைச் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் இனச் சுத்திகரிப்பை புலிகள் நம்பியிருந்த அதிகார வர்க்க வியாபாரிகளின் எந்த எதிர்ப்புமின்றி அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. எந்த அதிகார வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டோமோ, யாரால் கைவிடப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டோமோ அதே அதிகாரவர்க்கத்தைத் திருப்த்தி செய்ய, அவர்களுக்கு நாங்கள் தமிழர்கள் என்று கூற உருவாக்கப்பட்டது தான் நாடுகடந்த தமிழீழம். யார் யாருக்கெல்லாம் எதிராகப் போராட வேண்டுமோ அவர்களோடு கைகோர்த்துக் கொள்வதற்காக கட்டமைக்கப்படுவது தான் நாடுகடந்த தமிழீழம்.

புலிகளும் நாடுகடந்த அரசுக் காரர்களும் நம்பியிருப்பவர்கள் வன்னிப் படுகொலைகளை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என்பது மட்டும் அவர்கள் தகைமையல்ல ஆயிரக்கணக்கான படுகொலைகளை அவர்களே முன்னின்று நடத்தி முடித்துள்ளார்கள். கஷ்மீரிலும், நாகாலந்திலும்,ஆப்கானிஸ்தானிலும்,

ஈராக்கிலும்,கிரனடாவிலும்,பொஸ்னியாவிலும்,அயர்லாந்திலும் இன்னும் நீண்டுவிரிகின்ற பட்டியலில் அடங்கக்கூடிய அனைத்து நாடுகளிலும், முதியவர்களையும்,சிறுவர்களையும், அப்பாவிப் பொதுமக்களையும் துடிக்கத் துடிக்கக் கொன்றுபோட்டவர்கள் தான் இவர்கள். முப்பதாயிரம் போராளிகளின் தியாகங்களையும்,இலட்சக் கணக்கான மக்களின் அர்ப்பணங்களையும் இவர்களின் காலடியில் அடகுவைப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?

இன்றும் இலங்கைத் தீவில் மக்கள் சார்ந்த ஆயுதப் போராட்டத்தின் தேவை அருகிப் போய்விடவில்லை. மக்கள் நம்பிக்கை கொள்கின்ற ஒரு போரட்டம் சாம்பல் மேடுகளிலிருந்து உருவாவது தவிர்க்கமுடியாதது. காட்டிக்கொடுத்தவர்களுக்கும், துரோகமிழைத்தவர்களுக்கும் எதிராக கடந்துபோன தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்டம் உருவாகும். அதற்கான அனைத்து சாத்தியங்களும் இலங்கைத் தீவின் ஒவ்வோரு அசைவிலும் காணப்படுகிறது. அதனை தோற்றுப் போவதற்குத் துணைபோன அதிகார வர்க்கத்திற்குக் காட்டிக் கொடுப்பதற்காகவா நாடுகடந்த தமிழீழம்?

இந்திய அரசு நேபாளத்தில் எழுந்த போராட்டத்தை அழிப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அமரிக்காவிலிருந்து அத்தனை நாடுகளும் போராளிகளை அழிப்பதற்கு தம்மாலான அனைத்தையும் முயன்று தோற்றுப் போய்விட்டன. இவர்கள் அதிகார வர்க்கத்துடனும் அதிகார மையங்களுடனும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவோடு தமது போராட்டத்தை வெற்றிவரை கொண்டு சென்ற்றிருக்கிறார்கள்.

1980 களின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டின் கட்சி அரசியல் வாதிகளைப் பின்புலமாகக் கொண்டும் அதிகார மட்டத்தில் செல்வாக்கு நிலையிலுள்ளவர்களை ஆதாரமாகக் கொண்டும் தமது செயற்பாடுகளை வளர்த்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், ஐரோப்பிய நாடுகளிலும் இதேவைகையான தமது செயற்பாட்டுத் தளத்தை விரிவு படுத்தியிருந்தனர்.

ஐரோப்பாவின் அரசியல் வாதிகள், தன்னார்வ அமைப்புக்களின் உறுப்பினர்கள், வியாபார நிறுவனங்கள் என்பனவற்றை மையமாகக் கொண்டே புலிகள் அமைப்பின் சர்வதேசச் செயற்பாடுகள் அமைந்திருந்தன. மத்தியதரவர்க்க, படித்த நிர்வாக அமைப்பாளர்களூடாகவும் கட்சிசார் அரசியல் வாதிகளூடாகவம் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாடுகளின் ஆதார சக்தியாக புலிகளின் பண வலிமையும் உலக மயப்படுத்தப் பட்டிருந்த அவர்களின் வியாபார அமைப்புக்களுமே அமைந்திருந்தன.

இவையெல்லாம் இராணுவத்தளபாடங்கள் மட்டுமே போராட்டத்தின் ஒரே பலமென நம்பிடிருந்த புலிகளின் தலைமைக்கு அதற்கான இராணுவப் பலத்தை அதிகரிப்பதற்காகவே பயன்பட்டன.
உள்நாட்டில் மட்டுமல்ல அன்னிய தேசங்களிலும் கூட மக்களின் பலத்தையும் மக்கள் சக்தியையும் முற்றாகவே நிராகரித்த அதிகார அரசியல் மீது நம்பிக்கை கொண்டிருந்த புலிகளின் மக்களுக்கெதிரான செயற்பாடுகள் புலிகளை மட்டுமல்ல போராட்டத்திற்கான நியாயத் தன்மையையும், உலகெங்குமுள்ள ஜனநாயக, மனிதாபிமான சக்திகள் மத்தியில் சிதறடித்து இனப்படுகொலைக் கெதிரான போராட்டத்தைச் சின்னாபின்னப்படுத்தி விட்டது.

G20 நாடுகளின் ஒன்று கூடல் லண்டனில் நிகழ்ந்த போது பிரித்தானிய அரசு அதிர்ந்து போகும் வைகையில் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான சமூக உணர்வுள்ள மக்கள் கலந்து கொண்ட இப்போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த அதே நாளில் வன்னியில் இலங்கை அரசு தனது சொந்த மக்களைக் கொசுக்கள் போலச் சாகடித்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறத்தில் பிரித்தானியத் தமிழ் போரம் போன்ற புலி சார் அமைப்புக்கள் பிரித்தானிய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் தலைமை தாங்கி நடாத்திய புலம் பெயர் தமிழ் மக்களை மட்டுமே உள்வாங்கிக் கொண்ட எதிர்ப்புப் போராட்டங்கள் பிரித்தானிய மக்கள் மத்தியிலோ, அவர்களைப் பிரதிநித்தித்துவப் படுத்தும் அரசியல் முற்போக்குக் கூறுகள் மத்தியிலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட போது அவ்வாகிரமிப்பை எதிர்த்து “போர் எதிர்ப்பு அணி” பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டது. இவர்கள் நடாத்திய முதல் எதிர்ப்பூர்வலம் மூன்று லட்சம் பிரித்தானிய மக்களைத் தெருவில் இறக்கியிருந்தது. இவ்வணியின் தொடர்ச்சியான போராட்டங்களும் பிரச்சாரங்களும் பிரித்தானியப் பிரதமராகவிருந்த ரொனி பிளேயரின் அரசியல் செல்வாக்கையும், அவரின் மனிதாபிமான பிம்பத்தையும் குழிதோண்டிப் புதைத்தது மட்டுமல்ல தொடர்ந்து வந்த தேர்தலில் குறித்த தோல்வியைச் சந்திக்கவும் இது பிரதான காரணமாக அமைந்திருந்தது.

பிரித்தானிய அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோக்கும் சக்திவாய்ந்த இது போன்ற அமைப்புக்களோ, அவ்வமைப்புக்களைச் சார்ந்தவர்களோ இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இன்று வரை அணுகப்படவில்லை. ஐம்பதாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் கூட அதிகார மையங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த புலி சார் அமைப்புக்களின் இந்தச் சிந்தனை முறையும் அரசியலும் தான் எதிர்ப்புப் போரை அதன் தடையங்கள் கூட இல்லாமல் நிர்மூலமாக்கியிருக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பு நடத்தப்பட்ட போதெல்லாம் தெருவுக்கு வந்து போர்க்குரல் கொடுத்தவர்கள் தான் தமிழ் நாட்டுமக்கள். 1983 இல் இலங்கையில் இனப்படுகொலை ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த போது நடைபெற்ற போராட்டங்களில் தமிழ் நாடே செயலிழந்து போயிருந்தது. இலங்கை அரசின் திட்டமிட்ட இனப் படுகொலைகளை நன்கு அறிந்திருந்த தமிழ் நாட்டு மக்கள் புலிகளை அவ்வடக்கு முறையின் பிரதானமான எதிர்ப்புச் சக்தியாகக் கருதினார்கள்.

மக்களை ஒரு போதும் நம்பியிராத புலிகள் தமிழ் நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை தமக்குச் சார்பாகக் கையாளும் வழி முறையாக இம் மக்கள் எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள, கருணாநிதி, வைகோ, நெடுமாறன் போன்ற சந்தர்ப்பவாதிகள் இலங்கைப் பிரச்சனையை முன்வைத்துத் தம்மை வளர்த்துக் கொண்டனர்.

பிரபாகரன் கொல்லப்பட்டால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு பாயும் என்றவர்களின் கரங்களில், பிரபாகரனோடு ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது கீறல் கூட ஏற்படவில்லை.

புலிகள் இராணுவ பலம் மிக்க அமைப்பாக இருந்த போது அவர்களால் புறக்கணிக்கப்பட்ட அமைப்புக்களும், தனி மனிதர்களுமே இன்று இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்காகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

மேற்கு நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் மக்கள் சார்ந்த அமைப்புக்களைப் புறக்கணித்த புலிகளின் சிந்தனை முறையையும் செயற்பாட்டுத் தன்மையையும் இன்று கவனத்தில் கொள்ளப்படவேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும்.
இராணுவ அமப்பின் பலம் மட்டுமே புலிகளின் பலம் என்ற நிலையானது, புலிகளின் அப்பலம் அழிக்கப்பட்ட போது அவர்கள் எதிர்ப்பரசியற் தளத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டார்கள். இந்நிலையில் புலிகள் குறித்த தொடர்ச்சியான விமர்சமென்பது இலங்கை அரசின் பேரினவாத அடக்கு முறையை நியாயப்படுத்துவதாக அமையும் என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டாலும் புலிகளின் தோல்வியுற்ற போராட்ட முறைமை என்பதும் அதற்கான சிந்தனை வடிவங்களும் முற்றாக விமர்சனத்திற்குட்படுத்தப் படவேண்டியது அவசியமாகும்.

புலிகளின் இவ்வாறான அதிகார சமரச அரசியலின் நேரடியான தொடர்ச்சியே தேசம்கடந்த தமிழீழ அரசாகும். ஏலவே தோல்வியுற்ற இவ்வரசியல் சிந்தனை முறமையானது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.

புதிய ஒழுங்கமைபின் அதிகார மையங்களான ஐரோப்பா,அமரிக்கா,இந்தியா,சீனா போன்ற நாடுகளின் அணிகளிடையேயான சர்வதேச உறவு என்பது மக்கள் நலன் சார்ந்த, மனிதாபிமானம் சார்ந்த ஒன்றல்ல.

சரிந்து விழுகின்ற வியாபாரக் கட்டமைப்பை மறுபடி ஒழுங்கைமைக்க முடியாமல் திணறுகின்ற மேற்கிற்கும், புதிய ஆசிய வல்லரசுகளுக்கும் தமது வியாபார நலன்களே பிரதானமானவை. ஆப்கானிஸ்தானிலும்,இந்தியாவிலும், இலங்கையிலும், உலகம் முழுவதிலும் இதே வியாபார நலன்களுக்காக இன்னும் மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்படும்.

இலங்கைத் தமிழ் பேசும் மக்களைப் போலவே உலகெங்கும் படுகொலைகளையும், அவலத்தையும் எதிர்னோக்கும் மக்கள் கூட்டங்களைப் பலப்படுத்த வேண்டும். மேற்கு நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த அழுத்தக் குழுக்களோடு இணைந்து கொண்டு அந்நாட்டு அரசுகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நிராகரித்து, புதிய முற்போக்கு இயக்கங்களைப் பலப்படுத்தவேண்டும். இவர்கள் முன்னெடுக்கும் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.

தவிர, தேசம் கடந்த தமிழீழ அரசு என்ற புலிகளின் தோல்வியடைந்த அரசியலின் தொடர்ச்சியென்பது அபாயகரமானது. அநாவசியமான, மறுதலையான நம்பிக்கையை வளர்க்கும் இவ்வாறான நடவடிக்கைகள் ஏனைய போராட்ட சக்திகள் ஈழத் தமிழர்களுக்காக முன்னெடுக்கும் போராட்டங்களை மழுங்கடிப்பது மட்டுமல்ல நீண்டகால நோக்கில் எதிர்ப்பரசியலுக்கான சாத்தியப்பாட்டையே நிமூலமாக்கும் தன்மை வாய்ந்தது.




நன்றி: இனியொரு


நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் - தாயக மக்களின் பெயரில் புலம்பெயர் அரசியல் சவாரி : த ஜெயபாலன்

மே 18க்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப் புயல் மையங்கொண்டது போன்று மாறி மாறித் தேர்தல்கள் வந்து போகின்றது. வட்டுக்கோட்டைத் தேர்தல், ஜனனி ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல், நாடுகடந்த தமிழீழத்தின் நாட்டுக் குழுக்களுக்குத் தேர்தல், யாழ்ப்பாண மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல், இலங்கை ஜனாதிபதித் தேர்தல், இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானியத் தமிழர்களுக்கு இவற்றுடன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்று கடந்த ஓராண்டுக்குள் தமிழ் மக்கள் மீதான ஜனநாயகச் சுமை பெரும் சுமையாகிவிட்டது. இதுவரை ஏக தலைவரும் அவரது இயக்கமும் மட்டும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முடிவெடுத்த நிலைபோய் தற்போது தமிழ் மக்களை வாக்களித்து ஆணை வழங்கும்படி கேட்கின்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. போகின்ற போக்கில் வட்டுக் கோட்டைக்கும் நாடு கடந்த தமிழீழத்திற்கும் மட்டுமல்ல ஏக தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? ஏக தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்று தேர்தல் வைத்து முடிவெடுக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகம் ஏதோ ஒரு வகையில் வீச்சுப் பெற்றுள்ளது.

மே 02, 2010ல் நாடு கடந்த தமிழ் பாராளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து செறிந்து வாழும் இடங்களில் நடைபெறவுள்ளது. 135 பேர் கொண்டு அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் 115 பேர் புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் செறிவாக வாழுகின்ற நாடுகளில் இருந்து தேர்தல் மூலமாகத் தெரிவு செய்யப்படுவார்கள். ஏனைய 20 பேரும் தமிழ் மக்கள் செறிவு குறைந்த அல்லது தேர்தலை நடாத்துவதற்கு வாய்ப்புக் குறைந்த பகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்வார்கள். இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 115 பேரால் தெரிவு செய்யப்படுவார்கள். 20 பேரில் ஈழத்தமிழ் மக்கள் வாழாத நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் பங்குபெற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி அதன் மதியுரைக் குழு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கின்றது: ”தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்றெடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைக்கூடாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி வாழுகின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அத்தோடு தமிழர்கள் தமது இறைமையை நிலை நிறுத்தும் போராட்டத்தினை முன்னெடுக்கும் பணியில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரும் பெரும் பங்கு வகிக்க வேண்டும் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் தாராளவாத மக்களாட்சியின் இடையே வாழ்கின்றனர். தாம் வாழும் நாடுகளின் விதிமுறைகளுக்கேற்ற வகையில் தமிழீழ இலட்சியத்தை ஜனநாயக அமைதி வழிகளால் முன்னெடுக்கலாம் என்பதில் பற்றுறுதி கொண்டிருக்கிறார்கள். அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.”

இதில் உள்ள ஆபத்தான அம்சம் இதுவரை சரிவர உணரப்படவில்லை. ஈழத் தமிழ் மக்களின் பெயரால் நடாத்தப்படுகின்ற இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் தமது தாயகத்தை விட்டகலாத தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லை. இலங்கை அரசு அப்பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்கின்ற நியாயமான அச்சம் காரணமாக இருந்தாலும் தாயக மக்களின் பெயரில் நடாத்தப்படுகின்ற இந்தப் பாராளுமன்றத்தில் அம்மக்கள் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டு இராதது இதன் மிகப்பெரும் பலவீனம்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் பிரதிநித்துவப்படுத்தவில்லை என்பது கடந்த ஓராண்டு காலத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. வன்னி யுத்தத்தில் இடம்பெற்ற மிகமோசமான அழிவுக்கு இலங்கை அரசு எவ்வளவு பொறுப்புடையதோ அதேயளவு பொறுப்பு இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்குப் பின்னணியில் உள்ளவர்களுக்கும் உண்டு. இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிடுபவர்கள் பெரும்பாலும் தங்களுடைய தகமையாக புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்களில் பங்குபற்றியதை குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் இவர்களில் யாருமே அம்மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வன்னி மக்கள் யுத்தத்தில் இருந்து தப்ப முடியாது தடுத்து வைக்கப்பட்டதையோ, தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறார்கள் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டதையோ, யுத்த்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையோ சுட்டிக்காட்டவில்லை. பணயம் வைக்கப்பட்ட தமிழ் மக்களை விடுவிக்கும் படி விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. சர்வதேச சமூகம் அம்மக்களை விடுவிக்க எடுத்த முயற்சிக்கு எதிராகவும் இவர்கள் குரல் எழுப்பி இருந்தனர். இந்நடவடிக்கைகள் அனைத்தும் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்திருந்தது. வன்னி மக்கள் மிகக் கடுமையான யுத்தத்தை எதிர் கொண்டு வரலாறு காணாத அழிவைச் சந்தித்த போதும் இன்று தேர்தலை நடாத்துகின்ற நாடு கடந்த தமிழீழத்திற்கான செயற்குழுவும் தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளர்களும் பொறுப்பற்ற முறையிலேயே அன்று நடந்து கொண்டனர். இவர்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்ய எவ்வித தகுதியையும் கொண்டிருக்கவில்லை.

இவர்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் வெளிப்படுத்தவில்லை என்பதனை இவர்களின் பிரதிநிதிகளை முற்றாக நிராகரித்ததன் மூலம் தாயக மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலட்சிய வாக்கியமான தாயகம் தேசியம் இறைமை இவற்றை முன்வைத்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிட்டது. இதற்கு புலம்பெயர்ந்த மண்ணில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களும் பெரும்பாலும் ஆதரவு வழங்கி இருந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முன்னணியில் நின்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர். இப்போராட்டங்களில் முன்னின்ற மற்றுமொருவரான எம் கெ சிவாஜிலிங்கமும் தோற்கடிக்கப்பட்டார். இவை புலம்பெயர்ந்த அரசியல் தலைமைகள் தாயக மண்ணில் இருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு உள்ளன என்பதைப் புலப்படுத்துகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழு நாடு கடந்த அரசு பற்றி இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகிறது: ”ஈழத் தமிழரின் புலப்பெயர்வும் அவர்களுக்கு நாடு கடந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறது. மரபார்ந்த நாடு-தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து ‘நாடு கடந்த தேசியம்’ என்ற புதிய நிலையை அவர்கள் எட்டியுள்ளனர். நாடு கடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக, பொருளியல், அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைக்கும் வழிமுறையாகும்.”

இப்பகுதியில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களை அவர்களின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைப்பதற்கு இதுவும் ஒரு வழிமுறையாக அமையலாம். ஆனால் அதனைத் தாண்டி தாயகத்தில் வாழ்கின்ற மக்களின் அரசியல் பொருளாதார வாழ்நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலுக்குள் வாழ்ந்து கொண்டு அம்மக்கள் தொடர்பான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறுவது ஏற்கனவே வன்னி மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்திய கைங்கரியத்தையே இவர்கள் மீளவும் செய்ய உள்ளனர் என்பதனைக் கட்டியம் கூறுகின்றது. ஒப்பீட்டளவில் ஜனநாயகப் பண்புள்ள மேற்குலகில் வாழ்ந்து கொண்டும் தங்கள் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய எவ்வித மீளாய்வும் இல்லாமல் தங்கள் பலம் பலவீனம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இல்லாமல் மீண்டும் தாயக மக்களுக்காக இவர்கள் சிந்திக்க முற்படுவது அம்மக்களுக்கு இவர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அச்சத்தையே தோற்றுவிக்கின்றது.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களில் முற்றாக அல்லது பெரும்பாலானவர்கள் அரசியல் அலையில் அடிபட்டுச் செல்பவர்களாகவே உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் தங்களையும் இணைத்துக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தியதற்கு அப்பால் இவர்களிடம் எவ்வித அரசியல் அனுபவமும் இருந்ததில்லை. இதனை அவர்கள் பற்றிய குறிப்புக்களே புலப்படுத்தி நிற்கின்றது. மேலும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் போட்டியிடுபவர்கள் செயற்பாட்டாளர்களும் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு தங்கள் நோக்கங்களுக்காக பினாமிகளாகப் பயன்படுத்தினார்களோ இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்குப் பின்னால் உள்ளவர்களும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். இந்தத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படும் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு எவ்வித அரசியல் பொருளாதாரப் பலமும் கிடையாது. உண்மையான பொருளாதார பலம் இதன் பின்னணியில் உள்ளவர்களிடமே உள்ளது. அவர்களே இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை இயக்கப் போகின்றார்கள். அவர்களே இத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பெரும்பாலும் அரசியல் முகவரியற்றவர்கள். அல்லது அரசியலில் பாலபாடத்தைத் தாண்டாதவர்கள்.

”நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் வன்முறை தவிர்ந்தவையாகவும் எந்த நாட்டு சட்டங்களையும் மீறாத வகையிலும் மேற்கொள்ளப்படும்.” என்று நாடு கடந்த அரசின் மதியுரைக் குழு தெரிவிக்கின்றது. இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் தற்போது தொடர்புபட்டவர்கள் ஒவ்வொருவருமே மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழத்திற்கான அதன் நடவடிக்கைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள். தற்போது அது பற்றிய எவ்வித மீள்பரிசீலனையும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி வன்முறையைக் கைவிட்டுவிட்டதாக அறிவிக்கின்றனர். மே 18ல் இரவோடு இரவாக இவர்கள் பெற்ற ஞானம் மிக ஆபத்தான ஞானம். இன்னொரு மே 18ல் இரவோடு இரவாக ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்று இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இவர்கள் வெறும் பினாமிகளே. இவர்களை இயக்குபவர்கள் தான் எப்போதும் முடிவுகளை எடுப்பார்கள்.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கு 20 பேரைத் தெரிவு செய்வதற்கு 38 பேர் வரை போட்டியிடுகின்றனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொருளாதார பலத்தை தம் வசம் வைத்துள்ள ரூட் ரவி, தனம் மற்றும் முக்கிய புள்ளிகள் போட்டியிடவில்லை. இவர்களால் இயக்கப்படுகின்ற அடிப்பொடிகளே தேர்தலில் நிற்கின்றனர். இவர்களில் யார் வென்றாலும் முடிவுகள் எடுக்கப் போகின்றவர்கள் இவர்களை இயக்குகின்ற எஜமானர்களே. நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றம் இன்னுமொரு பிரிஎப், ரிவைஓ போன்றே இயங்கும்.

தங்களுக்கு சமூக அந்தஸ்த்தை வேண்டுபவர்கள் போட்டியிட்டு தங்கள் இமேஜை கட்டமைப்பதற்கு அப்பால் தாயக மக்களுக்கு இவர்களால் ஏதுவும் சாதிக்க முடியும் என்பது சந்தேகமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன், மாவை, சுரேஸ் கூட்டு குறைந்த பட்சம் மே 18ற்குப் பின்னாவது தங்கள் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத் தேர்தலில் நிற்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு சுயமான அரசியல் சிந்தனையே கிடையாது.

சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய சகோதரர் ஆறுமுகம் கந்தையா மனோகரன் யுகே யில் வட்டுக்கோட்டைக்கு வாக்கெடுப்பு நடத்தி இப்போது நாடுகடந்த தமிழீழம் அமைக்கவும் போட்டியிடுகின்றார். இவர் படித்துப் பெற்ற சமூக விஞ்ஞானம் - (அரசியல்) கலாநிதிப் பட்டமோ அல்லது ‘தூள்’ விநாயகர் என்று அறியப்பட்ட இல்போர்ட்டில் ‘செல்வ விநாயகர்’ என்ற ஆலயத்தை நிறுவிய செல்வராஜா செல்லத்துரை ஆன்மீகப் பலத்தோடு மேற்கொண்டுள்ள அறவழிப் பயணமோ தாயக மக்களுக்கு உதவியாக அமையாவிட்டாலும் உபத்திரவமாக அமையாது இருக்க முயற்சிக்க வேண்டும். இவர்கள் நாடு கடந்த தமிழீழம் எடுக்கிறார்களோ அல்லது தாங்கள் வாழும் நாடுகளில் தமிழீழம் எடுக்கிறார்களோ அவர்களது ஜனநாயக உரிமை. ஆனால் தங்கள் அபிலாசைகளுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் (நாடு கடந்த தமிழீழம்) பதவிகளுக்காகவும் தாயக மக்கள் மீது சவாரி செய்யாமல் இருக்க வேண்டும்.

குறிப்பாக பிரித்தானியாவைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கான தேர்தலும் இத்தேர்தல் ஆணைக்குழுவும் சிறு பிள்ளைத் தனமானதாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தல் வாக்காளர் அட்டையிலும் அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து வாக்களிப்பு நடைபெறுகின்ற தேர்தல்களிலேயே முறைகேடுகள் பற்றிய செய்திகள் வருகின்றன. இங்கு வாக்காளர் அட்டை இல்லை. தன்னை உறுதிப்படுத்த முடியாத வாக்காளரும் வாக்களிக்க வழியுண்டு. சில மாதங்களுக்கு முன்னர் இரு நாள் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தலில் ஈஸ்ற்ஹாம் பேர்ச்சஸ் வீதியில் உள்ள ஒருவர் ஒரே நாளில் தான் வெவ்வேறு வாக்களிப்பு நியைங்களில் 15 வாக்குகளை அளித்ததாகத் தெரிவித்தார். இதற்கு மேல் இத்தேர்தல் பற்றியோ அதனைக் கண்காணிக்கும் ஆணைக்குழு பற்றியோ குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் ஆணைக் குழுத் தலைவர் நடராஜா விஜயசிங்கம் தமிழ் தொலைக்காட்சியில் அரசியல் விமர்சனம் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் துதிபாடி வன்னி மக்கள் முள்ளிவாய்க்காலில் பேரழிவுக்கு உள்ளாவதை வேடிக்கை பார்த்தவர். ஓய்வு பெற்றுள்ள இவருக்கு இதுதான் தற்போது பொழுது போக்கு.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களின் முக்கிய தகுதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட போராட்டங்களில் பங்கு பற்றியது, கோசம் எழுப்பியது, புலிக் கொடி பிடித்தது. இதற்கு அப்பால் இவர்கள் தங்கள் சமூகம் சார்ந்த நடவடிக்கையாக எதனையும் குறிப்பிடவில்லை. பலருக்கு அவ்வாறு குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதும் உண்மை. போட்டியிடும் வேட்பாளர்கள் கல்வித் தகமை உடையவர்களாகவும் வியாபார உரிமையாளர்களாகவும் ஆலய உரிமையாளர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் இதுவரை தமிழ் சமூகத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் எவ்வாறான காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளனர் எனக் குறிப்பிடவில்லை. ஆனால் ‘தூள் விநாயகர்’ உரிமையாளர் செல்வராஜா உட்பட சிலரது குறிப்புகளோ 1977 அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு உள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்பதில் நம்பிக்கை கொள்வோம். அவை நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.

இக்கட்டுரையை 18 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற நினைவுக் குறிப்புடன் முடிக்கலாம் என நினைக்கிறேன். தற்போதைய ரிஆர்-ரெக் கல்வி நிலையம் தங்களது ஆறு மாத கணணிப் பயிற்சியில் டிப்ளோமா பெற்ற மாணவர்களுக்கு மிடில்செக்ஸ் பல்கலைக் களகத்தில் பட்டமளிப்புச் செய்யும் முறையை அப்போது அறிமுகப்படுத்தி இருந்தது. பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டமளிப்பின் போது அணியும் அங்கிகளை அணிந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் வீட்டில் பிறேம் போட்டு அலங்காரத்துக்கே வைக்க முடியும். இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றமும் கிட்டத்தட்ட அது போன்ற ஒரு விடயமே.



நன்றி: தேசம் நெற்

“கற்பு”, கட்டற்ற பாலுறவு: குஷ்பு, திருமா, ராமதாஸ் – யார் சரி?

பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் பேகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்” எனத் திரைப்பட நடிகை குஷ்பு, இந்தியாடுடே (தமிழ்) வார இதழில் சொல்லி வெளியான கருத்துகள், “”கற்பு” மற்றும் பாலியல் ஒழுக்கம் தொடர்பாக வாத பிரதிவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது.

இந்தியாடுடே வாசகர்களோடு முடிந்து போயிருக்க வேண்டிய இந்தக் கருத்தை, கருணாநிதி குடும்பத்தினரால் வெளியிடப்படும் தமிழ் முரசு இதழ், தனது வியாபார அரசியல் நோக்கத்திற்காக, “”தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா?” எனும் தலைப்பில் பரபரப்பூட்டும் செய்தியாக மாற்றியது. இதையடுத்து, தினத்தந்தி (24.9.05) நாளிதழுக்கு பேட்டியளித்த குஷ்பு, “”திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என அதிமேதாவித்தனமாகக் கேட்டு வைத்தார். இதையடுத்து, பா.ம.கவும், விடுதலை சிறுத்தைகளும் தமிழ் பெண்களை குஷ்பு அவமானப்படுத்தி விட்டதாகக் குற்றஞ் சுமத்தி, அவருக்கு எதிராகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதோடு, அவருக்கு எதிராக கிரிமினல் வழக்குகளும் தொடுத்துள்ளன.

இந்தியாடுடே வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்பில், “”பெண்கள் மணமாகும்வரை கன்னியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு 66 சதவீதப் பெண்கள், “ஆம்’ என்று பதில் அளித்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் 82 சதவீதப் பெண்கள் திருமணமாகும்போது பெண்ணின் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று கருத்து சொல்லியுள்ளார்கள். திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதை 71 சதவீதப் பெண்கள் தவறு என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேட்டுக்குடி திமிரோடு குஷ்பு கேட்டிருக்கும் கேள்விக்கு, இந்தப் புள்ளிவிவரங்களே முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்லி விடுகின்றன. ஆனால், பா.ம.கவும், விடுதலைச் சிறுத்தைகளும் போராட்டம் நடத்துவதற்கு வேறு பிரச்சினையே இல்லை என்பது போல, “நீதி’ கேட்டு குஷ்புவுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.

நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, வேலைக்குப் போகும் பெண்கள் கூட, மோசமான, பொறுப்பில்லாத கணவனிடமிருந்து மணவிலக்கு பெறத் தயங்கும்போது, கிராமப்புறங்களில், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் “”அறுத்துக் கட்டும் பண்பாடு” ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. கணவன் மோசமானவனாக, பெண் பித்தனாக இருந்தாலும், இந்த ஒழுங்கீனத்தைப் பொறுத்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் அவனுக்காகவே வாழ்வதுதான் “”கற்புடைமை” என்ற பண்பாட்டிற்கு நேர் எதிரானது, இது. “யாருடன் சேர்ந்து வாழ்வது?” என்று தீர்மானிக்கும் உரிமையை “கற்பு” தட்டிப் பறித்து விடுகிறது. ஆனால், மணமான மறுநாளே அறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்த வேறொருவனுடன் சேர்ந்து வாழும் ‘கீழ் சாதிப் பெண்களை’ கிராமப்புறங்களில் காண முடியும்.

கறாராகச் சொன்னால், “கற்பு” சாதிகளைக் கடந்த தமிழ்ப் பண்பாடு அல்ல. சொத்துடைமை கொண்ட பார்ப்பன வேளாள சாதிப் பண்பாடுதான் “கற்பு”. இம்மேல்சாதி பண்பாட்டை, தொன்று தொட்ட தமிழர்களின் கலாச்சாரம் போல ஊதிப் பெருக்கியதில், இந்துத்துவாவாதிகள், திராவிடக் கட்சிகள், தமிழினவாதிகள், தமிழ் சினிமாக்களுக்கு முக்கிய பங்குண்டு. குறிப்பாக, “கீழ் சாதிகள்” “இந்து” என்ற போர்வையில் எவ்வளவு தூரம் பார்ப்பனமயமாக்கப்படுகிறதோ, அதற்கு நேர் விகிதத்தில் “கற்பு” என்ற பண்பாடு அச்சாதிப் பெண்கள் மீது திணிக்கப்படுகிறது.

பெரியார், அம்பேத்கர் வழிநடப்பவர்கள் என சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் வன்னியரான இராமதாசிற்கும், தாழ்த்தப்பட்டவரான தொல்.திருமாவளவனுக்கும் இந்த உண்மை தெரியாதா? இந்த உண்மைக்கு நேர் எதிராக அவர்கள் கற்பை தொன்றுதொட்ட தமிழ் கலாச்சாரம், பண்பாடு போல கொண்டாடுவது வரலாற்று மோசடி. பார்ப்பன வேளாளப் பண்பாடான கற்பிற்கு வக்காலத்து வாங்குவதன் மூலம், “கீழ் சாதி” பெண்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த உரிமைகளை, அவர்கள் தட்டிப் பறிக்கின்றனர். மேலும், “கீழ்ச்சாதி”களைப் பர்ப்பன பண்பாட்டில் மூழ்கடிக்கும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் வேலையை இவர்கள் சுலபமாக்கி விடுகிறார்கள்.

கட்டற்ற பாலுறவுக்கு கடைவிரிக்கும் தாராளமயம்!

“கற்பு”, “கன்னித்தன்மை” போன்ற பழைய சமூக கட்டுப்பாடுகள் மதிப்பீடுகளுக்கு எதிராக, “திருமணத்துக்கு முன்பே உறவு கொள்ளலாம்”, “கணவன் தவிர்த்த வேறு ஆடவனுடன் உறவு கொள்ளலாம்” என்பது போன்ற “பாலியல் புரட்சி’ கருத்துக்கள் (மேட்டுக்குடி) பெண்கள் மத்தியில் தோன்றுவதற்கு, தராளமயம்தான் மூலகாரணமாக இருக்கிறது. இதனைப் பாலியல் மருத்துவர்கள் தொடங்கி பெண்ணியவாதிகள் உள்ளிட்டு அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்த தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவது, ப.சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் மட்டும்தானா? பா.ம.க.விற்கு இதில் கொஞ்சம்கூடப் பங்கு கிடையாதா? கிட்டத்தட்ட கடந்த ஏழு ஆண்டுகளாக மைய ஆட்சியில் பங்கு பெற்று வரும் பா.ம.க., “தமிழ் பண்பாட்டிற்கு” எதிராக இப்படிப்பட்ட சீரழிவுகளைத் தோற்றுவிக்கும் தாராளமயத்தைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது முணுமுணுத்திருக்குமா?

ஒருபுறம் மேட்டுக்குடி பெண்களிடம் “”பாலியல் புரட்சி” கருத்துக்களைத் தோற்றுவிக்கும் தாராளமயம், இன்னொருபுறமோ அடித்தட்டு வர்க்கப் பெண்களின் “கற்புக்கே” உலை வைத்து விடுகிறது. தனியார்மயம் தாராளமயம் விவசாயத்தையும், கைத்தொழிலையும், சிறு தொழில்களையும் அழித்துக் கொண்டே போவதால், பிழைக்க வேறு வழியில்லாமல், அடித்தட்டு பெண்கள் விபச்சாரத்திற்குள் தள்ளப்படுவது தாராளமயத்தின் பின் அதிகரித்திருப்பதைப் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

பல்வேறு அழகு சாதனப் பொருட்களைச் சந்தையில் இறக்கிவிட்டு, பெண்களை அழகுப் பதுமைகளாக மாற்றும் போக்கும் தாராளமயத்தின் பின்தான் தீவிரமாக நடந்து வருகிறது. ஊருக்கு ஊர் அழகிப் போட்டிகள் நடப்பதும், அதில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறுமிகள் தொடங்கி மணமான பெண்கள் வரை கலந்து கொள்ளுவதையும் தாராளமயத்திற்கு முன் நாம் கேள்விப்பட்டதுண்டா?

எந்த தாராளமயம் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கும், பண்பாட்டிற்கும் உலை வைக்கிறதோ, அதே தாராளமயத்தை கெயில் ஓம்வட் போன்ற தலித் சிந்தனையாளர்கள், “தாழ்த்தப்பட்ட மக்களை உய்விக்க வந்த வழியாக”க் கொண்டாடுகிறார்கள். தொல்.திருமாவளவனோ பா.ம.க. இராமதாசு மூலம் தி.மு.க. கூட்டணிக்குள் நுழைந்துவிட காத்துக் கொண்டிருக்கிறார். அவர், தி.மு.க. கூட்டணிக்கு நுழைந்து விட்டால், “தமிழ் பண்பாட்டையும் தமிழச்சிகளின் கற்பையும்” பாதுகாக்கும் கேடயமாகத் தாராளமயம் மாறிவிடுமா?

எனவே, இவர்கள் ஒருபுறம் தாராளமயத்தை ஆதரித்துக் கொண்டு, மறுபுறம் “கற்பு’ என்ற “தமிழ் பண்பாட்டிற்காக”ப் போராட்டம் நடத்துவது பித்தலாட்டத்தனமானது

இந்தியா டுடேயின் தாராளமயச் சேவையும் பாலியல் சர்வேயும்

“செக்ஸ் பிரச்சினைகளை” கிளுகிளுப்பூட்டும் கட்டுரைகளாக எழுதிவரும் நாராயண ரெட்டி போன்ற மருத்துவர்கள் கூட, “திருமணத்திற்கு முன் செக்ஸ் போன்ற பாலியல் சுதந்திரங்கள் தேவையில்லாத ரிஸ்க்; ஆபத்தான சங்கதி” என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனாலும், இந்தியாடுடே வகையறாக்கள், இப்பாலியல் சுதந்திரத்தை எதிர்க்கும் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து, “பழமைவாதிகள், பத்தாம்பசலிகள், கலாச்சார காவலர்கள்” எனச் சாடுகிறார்கள்.

இந்திய ஓட்டுக் கட்சிகளிலேயே படுபிற்போக்கான இந்து மதவெறி பாசிஸ்டுகளை ஆதரித்து எழுதி வரும் பத்திரிகையான இந்தியா டுடே, இந்தப் பாலியல் சுதந்திரப் பிரச்சினையில், தன்னை கருத்து சுதந்தரத்தின் காவலனாகக் காட்டிக் கொள்கிறது. தாராளமயத்தின் பின், விபச்சாரம், பாலியல் சுற்றுலா சேவைத் தொழிலாக மாறிவிட்டதைப் போல, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள வக்கிரமான கேள்விகள் கூட கருத்துச் சுதந்திரம் ஆகிவிட்டன.

இந்தியா டுடேயில் கருத்து சொன்ன குஷ்புவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் திருமாவளவன் ராமதாசு கூட்டணி, அவரைவிட வக்கிரமான கேள்விகளைக் கேட்டுள்ள இந்தியாடுடே பத்திரிகையை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நடிகர் சங்க கட்டிடத்திற்குள் துடைப்பத்தை வீசிய அக்கூட்டணி, இந்தியாடுடே அலுவலகத்தின் மீது கை வைக்கத் துணியவில்லை.

அவர்கள் இந்தியா டுடேயைக் கண்டு கொள்ளாமல் விட்டதற்கு, ஒரு நடிகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் கிடைக்கும் மலிவான விளம்பரம், இந்தியா டுடேயை எதிர்த்து நடத்தினால் கிடைக்காது என்பது மட்டும் காரணம் அல்ல் அவர்களின் ஓட்டுச்சீட்டு அரசியலுக்கு இந்தியா டுடே போன்ற பிரபலமான பத்திரிகைகளின் ஆதரவு தேவை என்பதால்தான் மௌனமாக இருக்கிறார்கள். இந்தியா டுடேயை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால், அதில் விருந்தினர் பக்கம் எழுத மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்பது கூட திருமாவளவனின் வாய்க்குப் பூட்டு பூட்டியிருக்கலாம்.

தாராளமயம் பெண்கள் மீது எத்தனையோ சுமைகளை ஏற்றி வைத்திருக்கிறது. பெண்களின் செக்ஸ் பிரச்சினை குறித்து வருடத்திற்கு இரண்டு, மூன்று இதழ்கள் கருத்துக் கணிப்பு வெளியிடும் இந்தியா டுடே, பெண்கள் மீது தாராளமயம் திணித்துள்ள சுமைகளைப் பற்றி ஒரேயொரு கருத்து கணிப்பாவது நடத்தியிருக்குமா?

இந்தியா டுடே, பெண்களின் செக்ஸ் பற்றி கிளுகிளுப்பூட்டும் படங்களோடு கருத்துக் கணிப்பு வெளியிடுவதற்கு காரணம், அதனின் வியாபார நோக்கம் மட்டும் அல்ல வாழ்க்கையை விதவிதமாக அனுபவிக்கத் துடிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் பாலியல் கலாச்சாரத்தை, நடுத்தர வர்க்கப் பெண்களையும் தாண்டி கீழே கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற இந்தியா டுடேயின் வர்க்கப் பார்வைக்கும் முக்கிய பங்குண்டு.

திருமாவளவன் ராமதாசு கூட்டணியைக் கண்டிக்கும் பலரும், “குஷ்புவுக்கு கருத்துச் சொல்ல உரிமையில்லையா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள். குஷ்புவுக்கு கருத்துச் சொல்ல உரிமையில்லையா என்பதல்ல இங்கே பிரச்சினை. இப்படிக் கேள்வி எழுப்புவதன் மூலம் இந்த அறிவுஜீவிகள் பலரும் மையமான விசயத்திற்குள் நுழையாமல் நழுவிக் கொள்கிறார்கள். மாறாக, பாலியல் சுதந்திரம், பெண்ணுரிமை என்பது குறித்து இந்தியா டுடேயும், குஷ்புவும் சொல்லியிருக்கும் கருத்துகள் சமூகத்திற்குப் பயனுள்ளதா என்பதுதான் மையமான கேள்வி.

தனிப்பட்ட ரீதியாகப் பார்த்தால் கூட, பாலியல் சுதந்திரம் போன்ற சமூகப் பிரச்சினைகளில் கருத்துக் கூறும் அளவிற்கு குஷ்புவிற்குத் தகுதியும், அனுபவமும் உண்டா? திரைப்படத் துறையில் பாலியல் ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படுவதை அம்பலப்படுத்தி ஒரு வார்த்தை இவர் பேசியதுண்டா? தனது சொந்தப் படத்தில் கூட நடிகைகளை அரைகுறை ஆடையுடன் நடனமாட விடும் ஒரு மேல்தட்டு காரியவாத நடிகையை, ஏதோ பெண்ணுரிமை போராளியை போல, இந்த அறிவுஜீவிகள் தமிழக மக்களின் முன் தூக்கிப் பிடிப்பது கேவலமானது.

கற்பும்’, காதலும், கட்டற்ற பாலுறவும் – எது சரி?

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட, தனது பாலியல் தேவைகளை இவ்வளவு பச்சையாகப் பேசியிராத மேட்டுக்குடி வர்க்கமும், அவர்களது பத்திரிகைகளும், இப்பொழுது அதைப் பெண்ணுரிமையாக, புதிய சமூக ஒழுங்காகப் பிரகடனப்படுத்துவதற்குக் காரணம், தாராளமயம் புகுத்தியிருக்கும் நுகர்வு வெறி கலாச்சாரம்.

தினந்தோறும் புதிது புதிதாகக் கேட்கும் இந்த நுகர்வு வெறி, உணவு, உடை, நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றோடு மட்டும் நின்று விடுவதில்லை. பாலியல் உறவுகளிலும் தினுசுதினுசான வகைகளைக் கோருகிறது. அதுதான் வரைமுறையற்று பாலுறவு கொள்ளுதல் என்ற பழைய காட்டுமிராண்டி கால பாலுறவு பழக்கத்தை, நவீன பாலியல் சுதந்திரமாக — பாலியல் புரட்சியாக அறிமுகப்படுத்துகிறது.

குஷ்புவுக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிட்டுள்ள மாற்றுக் குரல்கள், “கால் சென்டர், கணினி தொழில் நுட்பம் போன்ற வேலைகள் ஆடவர்களுடன் பழகும் வாய்ப்பை அதிகரிக்கிறது… இத்தகைய சூழ்நிலை பெண்களின் பாலியல் நிலைகளிலும், பாலியல் தேர்வுகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிடுகிறது. இதற்குக் காரணம், இந்த நுகர்வு வெறிப் பண்பாடு தொழிலாளி வர்க்கத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான்.

குறிப்பாக, தாராளமயத்தின் பின் வந்துள்ள கால் சென்டர் போன்ற தகவல் தொழில் நுட்ப (நவீன மூளை உழைப்பு) தொழிற்சாலைகளில், ஊழியர் சங்கங்கள் இருக்காது; மாறாக, இந்தத் தொழில்கள் மொத்தமாகக் குவிந்துள்ள தொழில் நுட்ப பூங்காங்களுக்குப் போனால், நுகர் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் “ஷோரூம்களை”ப் பார்க்கலாம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு ஆளெடுப்பதே, அழகிப் போட்டி ஸ்டைலில் நடத்தப்படுகிறது. இதனால், அங்கு புதிது புதிதாக அழகிகளும், அழகன்களும் வந்து போன வண்ணம் இருக்கிறார்கள். வேலைப் பளுவில் ஏற்படும் மனச்சோர்வைக் குறைக்க, “அவுட்டிங்” என்ற மேல்தட்டு “”பார்ட்டி” கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால், மேல்தட்டு வர்க்கத்துக்கேயுரிய எல்லா பண்பாடுகளும், இவர்களிடம் தொற்றிக் கொள்கிறது. ஏற்கெனவே மனதளவில் பணக்காரர்களைப் போலவே வாழ ஆசைப்படும் நடுத்தர வர்க்க இளைஞர்கள், எளிதாக இந்தக் கலாச்சாரத்தில் மூழ்கி விடுகின்றனர்.

இந்த நவீன மூளை தொழிற்சாலையில் உள்ள வேலைப்பளு காரணமாக, கணவன் மனைவி இடையே பாலுறவில் பல சிக்கல்கள் தோன்றுவதாக மனநல மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கணவன் மனைவி இடையே உறவு சரியில்லாத பொழுது, சோரம் போவது எளிதாகி விடுகிறது. நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, நடுத்தர வர்க்கத்து ஆண்பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக தகவல் தொழில்நுட்பம் இருப்பதால், இந்தக் கலாச்சாரத்தை மனதளவில் முன்னரே ஏற்றுக் கொள்ளும்படி, அவர்களது பழைய பாலியல் கருத்துக்களை மாற்றியமைக்கும் வேலையை இந்தக் கருத்துக் கணிப்புகள் செய்து விடுகின்றன.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் பிறக்க, அவர்கள் இருவர் இடையே ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது; இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை குலைந்து போய்விட்டால், காதல் மரித்துப் போய், வாழ்க்கையே சவமாகிவிடும்.

பாலியல் புரட்சியோ, ஆண்பெண் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கத் தேவையில்லை என்பதை முன் நிபந்தனையாகக் கொள்கிறது. எனவே, இந்த உறவில் காதல் இருக்காது. காதல் இல்லாத உறவு நெறியுடையதாகவும் இருக்காது.

பாலியல் மருத்துவர்கள் பாலுணர்வை வெறும் உடல் சார்ந்த விசயமாகப் பார்க்கவில்லை. மனத்தின் பல்வேறு உணர்ச்சி நிலைகளின் ஒரு வெளிப்பாடே பாலுணர்வு எனக் கூறுகிறார்கள். ஆனால், பாலியல் சுதந்திரமோ ஆண்பெண் இடையேயான பாலுணர்வை வெறும் உடல் இச்சை சம்பந்தப்பட்ட விசயமாக குறுக்கி விடுகிறது. எனவே, இது அறியவிலுக்கே எதிரானதாகிறது. மேலும், காதல் போன்ற சமூக உறவுகள் இல்லாத காட்டுமிராண்டி காலத்தில், வெறும் பாலுணர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆண் பெண் இடையே உறவு இருந்த நிலைக்கு, நாகரிக மனித சமூகத்தை தாழ்த்தி விடுகிறது.

பெண்ணின் கன்னித்தன்மை என்பதே முட்டாள்தனமானது என மருத்துவ அறிவியல் சாடுகிறது. ஏனென்றால், பெண்ணின் “கன்னித் திரை” மிதிவண்டி ஓட்டுவது, நீந்துவது போன்ற நடவடிக்கைகளால் கூடக் கிழித்து போய் விடக் கூடியது. குஷ்பு இந்த அறிவியல் அர்த்தத்தில் கன்னித் தன்மையை எதிர்பார்க்கக் கூடாது எனச் சொல்லவில்லை.

ஒருவரை நம்பி ஏமாந்து போகும் பெண்களையும், பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்பட்ட பெண்களையும் கன்னித்தன்மை இல்லாதவர்களாகக் கூறும் சமூகம், அவர்களை மானம் இழந்தவர்களாக, திருமணத்திற்குத் தகுதியில்லாதவர்களாகச் சாடுகிறது. இந்தப் பிற்போக்குத்தனங்களை எதிர்த்து, அதன் அடிப்படையில் கன்னித்தன்மையை எதிர்பார்க்கக் கூடாது என குஷ்பு கூறவில்லை. மாறாக, திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்வது தவறில்லை என்ற அடிப்படையில் தான் கூறியிருக்கிறார்.

பாலுறவில் சுய கட்டுப்பாடுடன் இருப்பது அடிமைத்தனமாகாது என லெனின் குறிப்பிடுகிறார். இந்த சுய கட்டுப்பாடு பெரும்பாலான இளைஞர்களிடையே கலாச்சாரமாகவே காணப்படுகிறது. ஆனால், பெண்ணியவாதிகள் இந்த சுய கட்டுப்பாட்டை மீறுவதுதான் சுதந்திரம் என்கிறார்கள். சுய கட்டுப்பாட்டை மீறி திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்ளலாம்; கணவன் அல்லாத வேறு ஆண்களுடன் உறவு கொள்ளலாம் என்பவர்கள் திருணத்தையே ஒதுக்கித் தள்ள வேண்டியதுதானே? ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் ஏன் வைக்க வேண்டும்?

“திருமணத்திற்கு முன்பே பாலுறவு வைத்துக் கொள்ளலாம்; திருமணமான பெண்கள், வேறு ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம்” என்பதை பெண்ணியவாதிகள், ஆணாதிக்கத்தை எதிர்த்த பெண் விடுதலையின் அம்சங்களாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். இது, நடைமுறையில், பல பெண்களோடு உறவு கொள்ள அலையும் ஆண்களுக்கு, தனது பெண்டாட்டி, அம்மா, சகோதரிகளின் “கற்பை”த் தவிர, மற்ற பெண்களின் “கற்பை”யெல்லாம் துச்சமாக மதிக்கும் ஆண்களுக்கு, பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகக் கைகொடுக்கும்.

பெரும்பாலான தமிழ் பெண்கள் “”கட்டுப்பெட்டித்தனமாக” வாழும் போதே, ஆண்கள் வழிதவறிப் போனதற்கு பெண்கள்தான் காரணம், அவர்கள் உடுத்தும் உடைதான் காரணம் எனப் பழிப்போடும் ஆணாதிக்கத் திமிருக்கு, இப்பாலியல் சுதந்திரம் பெண்களைச் சீண்டுவதற்கும், பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பதில் முடியும்.

எதிர் எதிரான கருத்துக்களான ஆணாதிக்கமும், பெண் விடுதலையும் ஒன்றையொன்று அனுசரித்துக் கொண்டு சமாதான சகவாழ்வு முடியுமா? ஆண்கள், பல பெண்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம் எனும் பொழுது, பெண்களும் அப்படி இருக்கலாம் என்பது கேட்பதற்கு “மிகுந்த புரட்சிகரமானதாக”த் தோன்றினாலும், இதற்கும் பெண் விடுதலைக்கும் ஒட்டும் கிடையாது; உறவும் கிடையாது; ஒரு சீரழிவு, இன்னொரு சீரழிவை நியாயப்படுத்தி விடாது.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நவீனக் குடும்பம், ஆணாதிக்கம் நிறைந்ததுதான். அவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடியதுதான். இதைக் காட்டி குடும்பத்தையும், திருமணத்தையும் மறுக்கும் அராஜகவாதத்திற்குப் பதில் குடும்பம் மற்றும் ஆண் பெண் உறவுகளை ஜனநாயகப்படுத்துவதற்குப் போராட பெண்களைத் தூண்டிவிடுவதுதான் மாற்றுத் தீர்வாக அமைய முடியும். பெண்கள் இப்படிப்பட்ட போராட்டங்களை தமது அன்றாட வாழ்க்கையில் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நடைமுறை வாழ்க்கையில், கணவன் வேறாரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பது தெரியவரும் பொழுது, பெரும்பாலான பெண்கள் பஞ்சாயத்துப் பேசியோ, போலீசு நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுத்தோதான் பிரச்சினையைத் தீர்க்கப் போராடுகிறார்களேயொழிய, வீம்புக்காக வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்வது கிடையாது. கணவனின் கள்ள உறவு காரணமாகவோ, பாலியல் சித்திரவதை வரதட்சணை கொடுமை காரணமாகவோ அவனுடன் இனியும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால், அவனிடமிருந்து பிரிந்து போய் தனியாக வாழுகிறார்கள்; இல்லை, மணவிலக்கு பெற்றுக் கொண்டு மறுமணம் கூடச் செய்து கொள்கிறார்கள்.

பிடிக்காத கணவனோடு சேர்ந்து சலிப்போடு வாழ்வதை விட, வேறொரு ஆணுடன் இரகசியக் கள்ள உறவு வைத்துக் கொண்டு போலித்தனமாக வாழ்வதைவிட, மணவிலக்கு பெற்று, மறுமணம் செய்து கொள்வது, பாலியல் சுதந்திரத்தைவிட, முற்போக்கானது மட்டுமல்ல் சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நியாயமானதும்கூட.

திருமணம், குடும்பம் ஆகியவற்றின் வரலாற்று வளர்ச்சி குறித்து ஆராய்ந்த எங்கெல்ஸ், “ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக் கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும்படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்கள் தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை, அதற்கும் மேலாக, தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண்பெண் சமத்துவம், பெண்கள் பல கணவர் முறைக்குப் போய் விடுவதைவிட, ஆண்கள் உண்மையிலேயே ஒருதார மணத்தைக் கடைப்பிடிப்பதற்கும் பேருதவி செய்யும்” என்று குறிப்பிடுகிறார்.

எங்கெல்ஸ் குறிப்பிடுகின்ற பெண்களின் கவலைகள் மறைய வேண்டும் என்றால், ஆணாதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கின்ற, முதலாளித்துவ சமூகம் மறைந்து போக வேண்டும். இச்சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு பெண்களை அணிதிரட்ட, பாலியல் கருத்துக்களைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியமே கிடையாது. “பெண்கள் உழைப்பு கொடூரமாகச் சுரண்டப்படுவது; பெண் கல்வி மறுக்கப்படுவது; வரதட்சணை சாவுகள்; வரதட்சணைக் கொடுமையால் திருமணம் தள்ளிப் போவது” எனப் பெண்களைப் பாதிக்கும் பிற பிரச்சினைகளை முன் வைத்தே அவர்களை அணிதிரட்டிவிட முடியும்.

தாராளமயம், மேட்டுக்குடிப் பெண்களைப் “பாலியல் சுதந்திரத்தை” நோக்கித் துரத்துகிறது என்றால், அடித்தட்டு வர்க்கப் பெண்களை சமூகப் புரட்சியை நோக்கி நெட்டித் தள்ளுகிறது. தாராளமயத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் வீச்சு அடுப்படியில் முடங்கிக் கிடக்கும் பெண்களைத் தெருவுக்கு இழுத்து விடுகிறது. சென்னை இராணி மேரி கல்லூரி மாணவிகள் நடத்திய போராட்டம் தமிழகத்தையே உலுக்கி எடுத்ததையும்; மணிப்பூர் மாநிலத்தில் வயதான தாய்மார்கள், இந்திய இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து நடத்திய நிர்வாணப் போராட்டம் இந்தியாவையே உலுக்கி எடுத்ததையும் நாம் மறந்து விட முடியுமா?

அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மத்தியில் உருவாகி வரும் இப்புதிய பண்பாட்டை ஆதரித்து இந்தியாடுடே சிறப்பிதழ் வெளியிடாது. குஷ்பு கருத்துச் சொல்ல மாட்டார்; இப்புதிய பண்பாட்டை நாம் தான் அடையாளப்படுத்தி வளர்த்துச் செல்ல வேண்டும்.

ஆனால், இராமதாசும், திருமாவளவனும் “கற்பு என்ற தமிழ் பண்பாட்டைப் பாதுகாப்பதற்காக” அடித்தட்டு பெண்களைத் தூண்டிவிடுகிறார்கள். இந்தக் “கற்புடமை” பண்பாடு பெண்களை, சமூக உற்பத்தியிலும், வர்க்கப் போராட்டத்திலும் பங்கெடுத்துக் கொள்ள விடாமல் தடுத்து, அவர்களை அடுப்படியிலேயே முடக்கிவிடும் நயவஞ்சகம் நிறைந்தது என்பதை நாம் புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அதேசமயம், “கற்பு”க்கு எதிராக இந்தியாடுடே வகையறாக்கள் முன் வைக்கும் “பாலியல் சுதந்திரமோ” இளைஞர்களின் சிந்தனையை நஞ்சாக்கக் கூடியது!

___________________________________________________

நரியைப் பரியாக்கும் திருமா

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை ஜெயாவின் சோதிட மூடநம்பிக்கைக்காக அகற்றப்பட்ட பொழுது, “ஆண்களின் சொத்தாசைதான் கற்பு என்கிற கற்பிதத்தை உருவாக்கியது” எனப் புரட்சிகரமாக வாய்ச்சவடால் அடித்த திருமாவளவன், இப்பொழுது, “குஷ்பு இருப்பது கற்பைப் போற்றுகிற கண்ணகிகள் நடமாடும் தமிழ்நாட்டில் என்பதை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார்.” (ஜூ.வி. 2.10.05) எனக் கற்பை ஏற்றிப் போற்றுகிறார். “கற்பு என்பது மானுட சமூகத்தின் பொது ஒழுங்காக வரையறுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது” என இந்தியாடுடே (அக்.12, 2005) யில் முன்னுக்குப் பின் முரணாகப் பிதற்றுகிறார்.

திருமாவளவனுக்கு, முன்பு திருடர் பாதையாகத் தெரிந்த தேர்தல் பாதை, இப்பொழுது தலித்துகளைப் பாதுகாக்கும் ஜனநாயகப் பாதையாக மாறிவிட்டதைப் போல, ஆணாதிக்க கருத்தியலான கற்பும், தமிழ்ப் பண்பாடாக, பொது ஒழுங்காக மாறிவிட்டது.

____________________________________________________

தங்கர்பச்சானின் ஆண்டைத்தனம்

இராமதாசும், திருமாவளவனும், “குஷ்புவுக்கு ஒரு நீதி, தங்கர்பச்சானுக்கு ஒரு நீதியா?” எனக் குமுறிக் கொண்டிருப்பதே, இப்போராட்டத்தின் பிற்போக்குத்தனத்தை மட்டுமல்ல, இவர்கள் நோக்கத்தையும் அம்பலப்படுத்திக் காட்டி விடுகிறது. “பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள்” என தங்கர்பச்சான் கேவலமாகப் பேசியதால் அவர் நடிகர் சங்கத்தால், குஷ்பு, மனோரமா ஆகிய நடிகைகளின் முன் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார்” என்பது பிரச்சினையின் ஒரு பகுதிதான். இதனின் இன்னொரு பக்கத்தை சம்மந்தப்பட்ட இரண்டு தரப்புமே திட்டமிட்டே மூடி மறைத்து விட்டார்கள்.

தங்கர்பச்சான் சொந்தமாகத் தயாரித்த “சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்யா நாயரின் ஒப்பனைக்காரப் பெண்ணுக்கு 600 ரூபாய் சம்பள பாக்கியைத் தராமல் தங்கர்பச்சான் இழுத்தடித்து வந்தார். படப்பிடிப்பு வேலைகள் முழுவதும் முடியப் போகும் நேரத்தில் கூட தங்கர்பச்சான் இந்த சம்பள பாக்கியைத் தராததால், நவ்யா நாயர் ஒப்பனைக்காரப் பெண்ணுக்கு சம்பள பாக்கியைக் கொடுத்தால்தான் நடிப்பேன் என நியாயமான முறையில் தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தங்கர்பச்சான், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், “பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள்” எனத் திட்டித் தீர்த்தார். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பாடல் ஒலிநாடா வெளியீட்டு விழாவில், “கோடி கோடியா ரூபாயைப் போடுறோம். கேவலம், 600 ரூபாய்க்கா ஒரு மேக்கப் போடுற பொம்பளெ ஷூட்டிங்கை கேன்சல் பண்ண வச்சிடுச்சின்னா இந்தத் தமிழ் சினிமா எப்படி உருப்படும்?” என இந்தத் தமிழ் படைப்பாளி தனது ஆணவத்தைக் கக்கியிருக்கிறார்.

வேலை செய்வதன் கூலி கேட்டால், அதைக் கொடுக்காமல் திமிராகப் பேசுவது ஆண்டைகளின் மனோபாவம். தங்கர்பச்சான் நடிகைகளை விபச்சாரி என்று கேவலப்படுத்தியதற்காக மட்டுமல்ல, அவரின் இந்த தொழிலாளர் விரோத ஆண்டை மனோபாவத்துகாகவும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். தனது திரைப்படங்கள் அனைத்திலும் பெண்ணடிமைக் கருத்துக்களை விற்பனை செய்து வரும், இந்தப் பிற்போக்கு வியாபாரியைத் தமிழர்கள் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால், பாட்டாளி மக்கள் பெயரில் கட்சி நடத்தும் இராமதாசும்; மார்க்ஸ், அம்பேத்கர் என வாய்ச்சவடால் அடிக்கும் திருமாவளவனும், தங்கர்பச்சான் தமிழ் படைப்பாளி என்பதற்காகத் தண்டிக்கப்பட்டதாகப் பூசி மெழுகுகிறார்கள்.

இராமதாசும், திருமாவளவனும் தங்கர்பச்சானுக்காக வக்கீல்களாக மாறி வாதாடுவதற்கு, அவர் தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்ல் அவர் வன்னிய சாதியைச் சேர்ந்தவர் என்பதும் முக்கிய காரணம். இறுதியாகப் பார்த்தால், தமிழ் பாதுகாப்பு என்பது, இப்படிப்பட்ட பிற்போக்கு ஆண்டைகளைப் பாதுகாப்பதுதானா?

_________________________________________________

- புதிய ஜனநாயகம், 2005ஆம் ஆண்டு